Friday, October 9, 2009

ஸென் கதை : இயல்பாயிரு !

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான். பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான். தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி ஏசி விட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.

குரு கீழே இறங்கினார். சீடன் வியப்போடு பார்த்தான். குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

1 comment:

  1. ம் இயல்பாய் ..லைட் கலர் பேக்ரவுண்ட் வைங்க.. விரட்டறதுலயே கவனமா கருப்பு கலர் வைத்திருக்க்கீங்களே.. :)

    ReplyDelete